எகிப்தின் ராஃபா எல்லை வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் சிதைந்த காசாவுக்கு, ரஃபா எல்லை வழியாக மனிதநேய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15வது நாளாக தொடரும் போரால், காசாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான பொதுமக்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களின்றி தவித்து வருகின்றனர்.

அண்மையில் இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் பைடன் காசா வாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தினார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக 20 டிரக்குகளில் மனிதநேய பொருட்களைக் கொண்டு செல்ல இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது.

எகிப்தில் உள்ள ரஃபா எல்லை திறக்கப்பட்டு, அதன் வழியாக உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காசாவை அடைந்தன. முன்னதாக சுமார் 3000 டன் உதவி பொருட்களை ஏற்றப்பட்டிருந்த 200-க்கும் அதிகமான லாரிகள் காசாவுக்குள் நுழைவதற்கு முன்பாக ரஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த 7-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து வருகிறது.

அக்.7 தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் நாள் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200க்கும் அதிகமானவர்களை பிணையக் கைதியாக பிடித்துச் சென்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து காசா நகரை முற்றுகையிடப் போவதாக இஸ்ரேல் அறிவித்தது. நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தடைபட்டது. இந்நிலையில், தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத எகிப்தின் ராஃபா பகுதி வழியாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. காசாவுக்கு செல்ல எகிப்தின் ராஃபா மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது.

காசா நகர வாசிகளுக்கான மனிதாபிமான உதவிகள் விமானம் மூலமாக எகிப்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவை லாரிகளில் ஏற்றப்பட்டு ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அவை காசாவுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. ஐ.நா.வின் பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்து பெறப்பட்ட மனிதாபிமான உதவிகளை காசாவுக்கு கொண்டு செல்ல பொறுப்பேற்றிருக்கும் எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சொந்தமான 20 லாரிகளில் உதவிப் பொருட்கள் காசா எல்லைக்குள் நுழைந்திருப்பதாக சர்வதேச ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்தேரஸ் ராஃபா எல்லைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களைப் பார்வையிட வெள்ளிக்கிழமை எகிப்து சென்றார். அப்போது அவர். “இவை வெறும் லாரிகள் அல்ல.. இவை உயிர் நாடிகள்.” என்று வேதனை தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: admin