நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிசார் கடும் பாதுகாப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை(22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை பொலிஸார் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக சிலர் நடந்துக்கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும் கடும் விசனமும் தெரிவித்து, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆலய மகோற்சவ திருவிழாக்களின் விசேட திருவிழாக்கள் அடுத்து வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிகளவானோர் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு நடவடிக்கை

இந்நிலையில், ஆலய சூழலில் விரும்பத்தகாத செயல்கள், குற்றசெயல்கள், ஆலயத்திற்கு வருகை தருவோருக்கு இடையூறு ஏற்படுத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் பெருமாளவான பொலிஸார் சிவில் உடைகளில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆலய சூழலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை உற்சவத்தின் போது, ஆலயத்திற்கு வந்திருந்தோர் மத்தியில் அதிக சத்தத்தை எழும்பும், கோர்ன்களை ஊதியவாறு சென்ற இளைஞர் குழுவொன்றை சிவில் உடையில் நின்ற பொலிஸார் மடக்கி பிடித்து, விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் இருந்த கோர்ன்களை பறிமுதல் செய்து, அவர்களை கடுமையாக எச்சரித்து விடுத்துள்ளனர்.

மதுபோதையில் யாசகர்கள்

அதேவேளையில் மதுபோதையில் யாசகர்கள் சிலர் ஆலய சூழலில் யாசகம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாசகர்கள் சிலரையும் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது யாசகர் ஒருவரின் உடமையில் இருந்து , தொடுதிரை தொலைபேசி (ஸ்மார்ட் போன்) ஒன்றினை மீட்டுள்ளனர். தொலைபேசி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், தொலைபேசியை கையளித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor