மக்களின் நிலம் மக்களுக்கே!  மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை- ஈ.பி.டி.பி வலியுறுத்து

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், மண்டைதீவு கிழக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான காணிகளும் அவர்களுக்கே உரியதெனவும் குறிப்பிட்டுள்ளார்

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (07.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:

யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கு J/07 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 36 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில் எதிர்வரும் 2023.07.12 ஆம் திகதி அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமது காணிகளை கடற்படையானது சுவீகரிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் கடற்படையினர் அப்பகுதியில் உள்ள  தனியாருக்கு சொந்தமான காணியில் முகாமிட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து கடந்த காலங்களிலும் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தள்ளனர்.

இந்நிலையில், தற்போதும் குறித்த காணியை சொந்தமாக்கும் நோக்கில் அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மக்களின் காணிகள் மக்களுக்கே உரியது. அதை நீதிக்குப் புறம்பாக அபகரிக்க முனைவது பொருத்தமற்றது. அந்தவகையில் குறித்த காணிகளின் உரிமையாளர்களது கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது என்றும் ஈ.பி.டி.பி.  ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN