நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் ஏற்படும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அடிக்கடி மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுகிறது.

மேலும், எதிர்வரும் காலங்களிலும் மழையுடனான காலநிலை தொடரும் நிலை இருப்பதால் டெங்கு நோய் அதிகரிக்கும் சாத்தியக்கூறு அதிகமாகவே இருக்கிறது.

அதனால் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்த சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறே பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இதுவரைக்கும் உள்ள அறிக்கையின் பிரகாரம் மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

அதனால் இந்த பிரதேசங்களில் இருப்பவர்கள் யாருக்காவது 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் நீடித்தால் அவர்கள் உடனடியாக வைத்தியரை நாடி, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

இதேவேளை, நாற்பட்ட நோயாளர்கள், வயோதிபர்கள் 48 மணிநேரம் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் தங்கள் உடலில் வழமைக்கு மாறான வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor