ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்
போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய், வரும் பொங்கல் பண்டிகை முதல் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், எரிவாயு சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கான நிதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது எனப் போராடி வரும் மக்களுடன் தான் உறுதியாக நிற்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
நீண்ட காலமாக திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றும், விவசாய நிலங்களைப் பாதுகாக்க மக்கள் போராடி வருவதாகவும் கூறினார்.
2024 அக்டோபரில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் வளர்ச்சிக்கும், அதற்கான விமான நிலையங்களின் பங்குக்கும் தனது முழு ஆதரவு இருப்பதாகக் கூறிய அவர், பரந்தூரில் மட்டும் விமான நிலையத் திட்டம் அமையக் கூடாது என்றார்.
மேலும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும், ஏற்கனவே அளித்த உறுதிமொழியின்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘வெற்றிப் பயணம்’ திட்டம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS மற்றும் Deluxe அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் வகையில், புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த இலவசப் பயணத்திற்கு வருமான உச்சவரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடோ இல்லை. திருநங்கையரும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

