நடுவானில் அராஜகம் செய்த பெண்.. காவலரைக் கடித்ததால் விமானத்தில் பதற்றம்
அர்ஜெண்டினாவின் புவென்ஸ் அயர்ஸ் நகரிலுள்ள ஜார்ஜ் நியூபெரி விமான நிலையத்தில், ஜெட் ஸ்மார்ட் விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோர்டோபா செல்லவிருந்த பெண் பயணி ஒருவரிடம், கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துமாறு விமான ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டாயமாக விமானத்திற்குள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் விமானத்திற்குள் நுழைந்து, அந்தப் பெண்ணை கீழே இறங்குமாறு உத்தரவிட்டனர். ஆனால், அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்து போலீஸாருடன் கடுமையாக மல்யுத்தம் செய்தார்.
இந்த மோதலின் போது, தன்னை வெளியேற்ற முயன்ற ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அந்தப் பயணி கொடூரமாகக் கடித்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போலீஸார் அந்தப் பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அவர் வெளியேற்றப்பட்ட போது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் நிம்மதியடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானக் கட்டணப் பிரச்சனை, இப்படி போலீஸைக் கடிக்கும் அளவிற்குப் பெரிய வன்முறையாக மாறியது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

