ஈரான் தாக்குதலில் காயமடைந்த இலங்கையர்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக குவைத்திற்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் குறித்த மூவரும் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தில் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் பட்டதால் அவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இலங்கையர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் எவருடைய நிலையும் ஆபத்தானதாக இல்லை என குவைத்திற்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
காயமடைந்த இலங்கையர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

