தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்!

பாரிஸில் பயங்கரம்: தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்!

பாரிஸ் நகரின் 19-வது வட்டாரத்தில் (19e arrondissement) நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது 14 வயது தம்பியைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, பெற்ற தாயையும் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளான்.

 

கடந்த மே 25 திங்கட்கிழமை நள்ளிரவு தாண்டி (செவ்வாய்க்கிழமை அதிகாலை) சுமார் 3:10 மணியளவில், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த 16 வயது சிறுவன், தனது தாயையும் தம்பியையும் கொன்றுவிட்டதாகக் கூறித் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளான்.

 

தகவலறிந்த காவல்துறையினரும் அவசர மீட்புக் குழுவினரும் Rue de Crimée வீதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு உடனடியாக விரைந்தனர். அங்குள்ள ஓர் அறையில், 14 வயதுச் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டுச் சடலமாகக் கிடந்ததைக் காவலர்கள் கண்டறிந்தனர்.

 

சிறுவனின் தாயார் தலையில் சுத்தியலால் பலமாகக் தாக்கப்பட்டுப் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு உடனடியாக இதயத் தூண்டுதல் (CPR) முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் சுத்தியல் ஆகியவை அந்த வீட்டின் குளியல்தொட்டியில் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடனடியாக அந்தச் சிறுவன் தடுப்புக்காவலில் (Garde à vue) வைக்கப்பட்டான்.

 

கொடூரச் செயலில் ஈடுபட்ட இந்தச் சிறுவன் ஏதேனும் மனநலக் கோளாறுகளால் (troubles psychologiques) பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து ’15 வயதுக்குட்பட்ட சிறுவன் மீதான திட்டமிட்ட கொலை மற்றும் குடும்ப உறுப்பினர் மீதான கொலை முயற்சி’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அரசு தரப்பு, இச்சம்பவத்தின் முழுப் பின்னணியை அறியத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin