உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் – ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!!
Harmouz நீர்சந்தி மூடப்பட்டிருப்பதால் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளவில் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் பசி மற்றும் பஞ்சத்திற்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா திட்டப் பணிகளுக்கான அலுவலகத்தின் (UNOPS) நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் மோரேரா டா சில்வா இது குறித்து கூறுகையில், “உரங்களுக்கான மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் கடல்வழிப் போக்குவரத்து முடக்கம் ஆகியவை ஏற்கனவே உலக உணவு அமைப்பைப் பாதித்து வருகின்றன. விநியோகச் சங்கிலியை மீட்டெடுக்கவும், இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் அவசர இராஜதந்திர தலையீடு அவசியம்,” என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால், உரங்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. இது இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளின் விவசாய உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு இல்லாத ஏழை நாடுகளில் பயிர் விளைச்சல் கணிசமாகக் குறையக்கூடும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.
வணிகக் கப்பல்களை அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் சிறைபிடித்து வருவதற்கு சர்வதேச கப்பல் போக்குவரத்து அமைப்பு (ICS) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அல் ஜசீராவிடம் பேசிய கடல்சார் இயக்குனர் ஜான் ஸ்டாவ்பெர்ட் கூறியதாவது:”கடல்சார் ஊழியர்கள் எந்தவிதமான துன்புறுத்தலும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். வணிகக் கப்பல்களை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. இது உலக வர்த்தகப் பாதைகளை மேலும் சீர்குலைக்கும்.”
தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை
ஈரானில் சுமார் இரண்டு மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அமெரிக்காவுக்கு அடிபணியப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் தலைமையிலான உள்நாட்டுப் பிளவுகள் காரணமாக, ஒப்பந்தம் எட்டுவதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை,” எனக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானிய அதிகாரிகள் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனிக்கு (Mojtaba Khamenei) ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளனர். புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரானியத் தலைமை ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது

