ஈரானிடம் எண்ணெய் வாங்கத் துடிக்கும் இந்தியா! அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகத் தளர்வு
ஈரானுக்கு எதிரான எண்ணெய் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஈரானிய எண்ணெயை வாங்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.
மார்ச் 20-ஆம் திகதிக்குள் கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை வாங்கத் தயாராக உள்ளன. இதற்கான கட்டணம் செலுத்தும் முறைகள் குறித்து அமெரிக்காவின் தெளிவான விளக்கத்தை இந்நிர்வாகங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
தற்போது சுமார் 170 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கடலில் கப்பல்களில் தேங்கிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்மோஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசியாவின் பல சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ள நிலையில், ஈரானின் இந்த எண்ணெய் வரத்து தற்காலிக ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த உற்பத்தி குறைபாட்டை இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஈடு செய்யும் எனக் கூறப்படுகிறது.

