எரிபொருள் விலை உயர்கிறது? இன்று நள்ளிரவு முதல் மாற்றம் வரலாம்
விலை உயர்வு குறித்த அச்சத்தால் பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில்
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இன்று (21) நள்ளிரவு அல்லது நாளை (22) அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவைப்பாடுகளை முன்னிறுத்தி இந்த விலை உயர்வு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் வழங்கும் கியூஆர் குறியீடு இன்று நள்ளிரவுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, நுகர்வோர் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று (21) வாகனப் பதிவு எண்ணின் இறுதியில் ஒற்றை இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் நிலையங்களால் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை எரிபொருள் நிலையங்களுக்குப் பொதுவான எரிபொருள் விநியோகம் இடம்பெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், விசேடமாக ஓடர் (Order) செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு மாத்திரம் விநியோகம் செய்யப்படும் என அதன் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே குறிப்பிட்டுள்ளார்.
விலை உயர்வு குறித்த அச்சத்தால் பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

