டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்குக் பரிசுத்தொகை எவ்வளவு? நியூசிலாந்து அணிக்கு எவ்வளவு?
தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது மட்டுமின்றி, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி மிகப்பெரிய தொகையைப் பரிசாக வழங்கியுள்ளது. அது குறித்த முழு விவரங்களை இங்கே காண்போம்.
இந்திய அணிக்குக் கிடைத்த பரிசுத்தொகை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த முறை உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத்தொகையை உயர்த்தியிருந்தது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 3 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 27.48 கோடி ரூபாயாகும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.
நியூசிலாந்து மற்றும் அரையிறுதி அணிகளுக்கு எவ்வளவு?
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிக்கும் கணிசமான தொகை பரிசாகக் கிடைத்துள்ளது. அந்த அணிக்கு 1.6 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 14.65 கோடி ரூபாயாகும்.
அதேபோல, அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கும் தலா 7.90 லட்சம் டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 7.24 கோடி ரூபாயாகும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய மற்ற அணிகளுக்குத் தலா 3.80 லட்சம் டாலர் (சுமார் 3.48 கோடி ரூபாய்) பரிசாகக் கிடைத்துள்ளது.
மொத்தப் பரிசுத்தொகை
2026 டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக ஐசிசி ஒதுக்கிய மொத்தப் பரிசுத்தொகை 13.5 மில்லியன் டாலர் ஆகும். அதாவது சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல். இது கடந்த 2024 உலகக் கோப்பைத் தொடரை விட 20 சதவீதம் அதிகமாகும். உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கும் வெறும் கையுடன் அனுப்பாமல், ஐசிசி சன்மானம் வழங்கியுள்ளது. லீக் சுற்றில் வெளியேறிய ஒவ்வொரு அணிக்கும் தலா 2.50 லட்சம் டாலர் (சுமார் 2 . 29 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அணிகளும் நிதி ரீதியாகப் பயனடையும் வகையில் இந்தப் பரிசுத்தொகை அமைக்கப்பட்டிருந்தது.
இறுதிப் போட்டி சுருக்கம்
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 15 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையையும், மிகப்பெரிய பரிசுத்தொகையையும் தட்டிச் சென்றது.

