மரண பயத்தை காட்டிய ஹோர்முஸ் ஜலசந்தி.. உலக நாடுகள் ஓட்டம்.. இந்திய கப்பல்கள் மட்டும் கெத்தாகப் போனது எப்படி?பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!
ஈரான் நடத்தி வரும் போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இத்தகைய சூழலில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹோர்முஸ்’ ஜலசந்தி வழியாக இந்தியாவின் ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் பல சர்வதேச நிறுவனங்கள் இந்தப் பாதையைத் தவிர்க்கும் நிலையில், இந்தியக் கப்பல்கள் மட்டும் தடையின்றி பயணிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் இடையிலான சுமூகமான ராஜதந்திர உறவுகளே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமீபத்தில் இந்திய மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் விளைவாக, தற்போதைய போர்ப் பதற்றத்தின் போது இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் இலக்கு வைக்கப்படாது என்ற சமிக்ஞை ஈரானிடமிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இந்தப் பாதை மிக முக்கியமானது என்பதால், இங்கு நிலவும் பதற்றம் சர்வதேச எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

