ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

ஊரணி மீனவர்கள் மாயம் : 6 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு – இந்திய எல்லையில் தத்தளிப்பதாகத் தகவல்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு ஊரணிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயல்படுவதாக உறவினர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள், இன்று (2026 மார்ச் 04, புதன்கிழமை) வரை கரை திரும்பவில்லை.

வழமை போல மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களும் மறுநாள் வீடு திரும்பாததால், சக மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தினர். எனினும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

காங்கேசன்துறை காவற்துறை மற்றும் கடற்படையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும், தேடுதல் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 02), கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்குள் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் ஊரணி மீனவ சங்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீனவர்கள் உயிருடன் ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்தும், கடற்றொழில் அமைச்சு அவர்களை மீட்க இந்திய அதிகாரிகளுடன் இணைந்து எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். “ஆறு நாட்களாகியும் எமக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இந்திய எல்லைக்குள் தத்தளிக்கும் இலங்கை மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Recommended For You

About the Author: admin