காணிப்பிணக்கில் ஒருவரை அடித்து கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (பெப்ரவரி 20, 2026) வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக இழுபறியில் இருந்த ஒரு கொலை வழக்கிற்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
காணித் தகராறு காரணமாக 2015-ம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஜனவரி 22 அன்று, விவசாயக் காணி தொடர்பான பிணக்கு காரணமாக நா. மகேஸ்வரலிங்கம் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், வழக்கு விசாரணையின் போது இருவர் மரணமடைந்ததால், எஞ்சிய மூன்று பேருக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.
அரச தரப்புச் சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் அவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கினை அரச சட்டவாதிகளான எம்.ஏ.எம். லாபீர் மற்றும் அனுசாங்கன் ஆகியோர் திறம்பட நெறிப்படுத்தினர்.
வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் , கடந்த 2020ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்ற பகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதித் தீர்ப்பு மற்றும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் தனிநபர் பிணக்குகள் மற்றும் காணித் தகராறுகள் வன்முறையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இத்தகைய தீர்ப்புகள் சமூகத்தில் குற்றங்களைக் குறைக்க ஒரு பாடமாக அமையும் எனவும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளாா்.

