“குற்றவாளிகளே விசாரிக்கிறார்கள்!” கஜேந்திரகுமார் கண்டனம்

“குற்றவாளிகளே விசாரிக்கிறார்கள்!” கஜேந்திரகுமார் கண்டனம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , நாட்டில் நிலவும் சட்ட அமுலாக்க முறைமையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

“போரற்ற சூழலில், ஜனாதிபதி யாழ்ப்பாண வீதிகளில் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலில், வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை நியாயப்படுத்த முடியாது.”

ஒரு வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அவர்கள் மீறினால், வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையைத்தான் காவல்துறையினா் எடுக்கலாமே தவிர, சாரதியைச் சுட்டுக் கொல்ல முடியாது.

சிறுவனின் நெற்றியில் தோட்டா பாய்ந்ததாக உடற்கூற்று ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இது காவல்துறையினரின் தற்காப்பு நடவடிக்கை என்ற கூற்றை முற்றிலும் அவா் நிராகரித்துள்ளார்.

 

சம்பவ இடத்தில் காவல்துறையினா் “மாட்டுச் சாணம்” இருந்ததாகக் காண்பித்தமையை கடுமையாகச் சந்தேகித்துள்ள அவா் “அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணம் காணப்பட்டது” எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.”

“குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகிறது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குற்றம் செய்ததாகக் கூறப்படும் காவல்துறையினரே இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளமையாலேயே காவல்துறையினா் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவசரகால சட்டம் ஊடாக காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் கடந்த காலங்களில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

“ஒரு குற்றவாளியாக இருந்தாலும், காவல்துறையினா் சுட்டுக்கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Recommended For You

About the Author: admin