திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 11) நடைபெற்றது.

 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைத் தலைவர் சிவசம்பு ராமகிருஷ்ணன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், இராணுவம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கோண்டுள்ளனா்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் பக்தர்களின் நலன் கருதி பின்வரும் துறைகளில் விசேட ஏற்பாடுகளைச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மற்றும் புகையிரத சேவைகளை மன்னார் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இயக்குதல், நீர் மற்றும் மின்சாரம்: தடையில்லாத மின் விநியோகம் மற்றும் குடிநீர் வசதிகளை உறுதிப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் மருத்துவம்: நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்தல் குறித்து ஆராயப்பட்டது..

மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் குறித்தும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் பணிகளை முறைப்படுத்துதல் குறித்தும் ஆராயப்பட்டது.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம், பாலாவி தீர்த்தத்தைக் கொண்ட புனிதத் தலமாகும். சிவராத்திரி அன்று பாலாவி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவது பக்தர்களின் முக்கிய சடங்காகும்.

Recommended For You

About the Author: admin