“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல்
மன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய மேம்பாடு குறித்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப் அவர்கள் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக உள்நாட்டு விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மேட்டுநில பயிர்ச் செய்கையாளர்கள் 25 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஒரு இயந்திரத்தின் மதிப்பு தலா 140,000 ரூபாய் ஆகும்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) நிதியுதவியுடன், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் (MARR) இதனை ஏற்பாடு செய்திருந்தது.
எம்மால் உற்பத்தி செய்யக்கூடிய அரிசி போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் அரச சேவைத் துறையை மட்டும் வளர்ப்பது பொருளாதாரத்திற்குப் போதாது. ஒரு விவசாய நாடு என்ற ரீதியில் உற்பத்தித் துறையை (Production Sector) மேம்படுத்தினால் மட்டுமே பொருளாதார இலக்குகளை அடைய முடியும் எனக் குறிப்பிட்டாா்
மன்னார் பெருநிலப்பரப்பில் மட்டுமன்றி, தீவுப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதை அவர் பாராட்டினார்.
திட்டமிடல் பணிப்பாளர் எச்.ஹலிம் தீன், MARR தலைவர் அருட்பணி ரி. நவரட்ணம், செயலாளர் ராதா பெனான்டோ மற்றும் UNDP அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான உபகரணங்களை கையளித்தனர்.


