யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..?

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்..?

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளரும் விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தற்போது அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு செயலாளர் இது தொடர்பாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்குத் தயாராக இருப்பதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. பாதுகாப்பு அமைச்சு அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவே இல்லை.

 

இவ்வாறான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதனால் இவ்வாறான பொய்யான தகவல்களைச் சமூகமயப்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 

ஆகவே நபர் யாராக இருந்தாலும் அது குறித்த தகவல்களுக்குப் பொறுப்பேற்று அந்தச் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. ஏனெனில் இவ்வாறான செய்திகள் ஊடாக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படும் குழப்பம் அவ்வளவு பொருத்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin