யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு..!

யாழ். நகைக்கடையில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு..!

பெண் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் குறித்த இளம் பெண், தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாகத் தங்க நகைகளைத் திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய அப்பெண், 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21 ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.

 

இந்நிலையில், நகைக் கடையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது. இது குறித்து ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், குறித்த இளம் பெண்ணை நேற்று கைது செய்துள்ளனர்.

 

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும், மீதியை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சான்றுப்பொருள்களை மீட்கும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin