மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா..!
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்டச் செயலாளர் ஜீ .பிரணவன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தில் நேற்றைய தினம் (14.12.2025) ஞாயிற்றுகிழமை சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எச்.எம்.முஸம்மில், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி.மேனகா புவிக்குமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலை கலாசார, இலக்கிய நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டிருந்தது.
இதன் போது இலக்கிய விழாவை முன்னிட்டு மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இதன்போது அதிதிகளினால் பராட்டி நினைவுச்சின்னங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
2025 ஆம் ஆண்டு கலாபூஷண தேசிய விருதிற்காக தெரிவு செய்யப்பட்ட ஐந்து கலைஞர்கள் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றியதுடன் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின் பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2025 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.


