கிளிநொச்சியில் இடம்பெற்ற “பிடியளவு கமநலத்திற்கு”..!
“பிடியளவு கமநலத்திற்கு”என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பங்கேற்பு.
பயிர் செய்யப்படாது தரிசு நிலமாக காணப்படும் நிலங்களை பயிர்ச்செய்கைக்குரிய நிலமாக மாற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் “பிடியளவு கமநலத்திற்கு”என்ற தேசிய திட்டத்திற்கமைய பயிர்செய் நிலமாக மாற்றும் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளாது காணப்படும் நிலங்களை பயிர்செய் நிலமாக மாற்றும் இத்தேசிய நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருவையாறு முதலாம் பகுதியில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பா.தேவரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி லால் காந்த அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ,கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. யு.பி ரோகண ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல வருடமாக பயிர்செய்யாது காணப்பட்ட நிலத்தில் சம்பிரதாயபூர்வமாக நிலக்கடலை விதைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர், விவசாய துறை சார்ந்த திணைக்களங்களின் உதவிப்பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வினை தொடர்ந்து கெளரவ அமைச்சர் அவர்கள் வடமாகாண தென்னை முக்கோண வலயத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தென்னை செய்கையையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.


