
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27,28, மற்றும் 01 ஆகிய மூன்று தினங்களில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு சென்பற்றிக்ஸ் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.
இதன்போது சென்பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் ருசிரா குலசிங்கம் ஆகியோர் இது தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
சென் பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகளின் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று தின போட்டியாக இது நடைபெறவுள்ளது.
இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.
இத் தொடரின் தொடர்ச்சியாக 32வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி மார்ச் 8ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கும், பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5வது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி மார்ச் 12ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் 23 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு பற்குணம் மதுஷனும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு சிதம்பரலிங்கம் மதுஷனும் தலைமை தாங்குகின்றனர்.