
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதான பொறுப்பு உண்டு.
எது எவ்வாறிருப்பினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்து அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முயற்சிக்கின்றோம்.
அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும் அழைத்து வரப்படாவிட்டாலும் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது, அர்ஜூன மகேந்திரன் அவரது நண்பனின் திருமணத்துக்குச் செல்வதாகவே கூறிச் சென்றதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனவே அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொறுப்பிருக்கின்றது.
எனவே அவரை அழைத்து வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தால் வழக்கு விசாரணைகளுக்கு ஏதுவாக அமையும்.
எது எவ்வாறிருப்பினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.
அர்ஜூன மகேந்திரனுக்கு விடுமுறைக்கு அனுமதி வழங்கியமைக்கு அப்பால் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பிருக்கிறது.
பிணை முறி கோரல் முறைமையை அவசரமாக மாற்றியமை உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ரணில் ; பதிலளிக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்