திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

தியாக தீபம் திலீபன் அவர்கள் தமிழினத்தின் அடையாளம் என்ற படியால் அவர் மக்களுக்குச் சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புக்கள் சாராமல் பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.

நினைவேந்தல் இடம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கிறது. ஆகவே அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன். திலீபனின் நினைவு தினமன்று கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விடமாட்டார்கள். குழப்புவார்கள். ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் உள்ள அரசு வேறு ஒரு வழியைக் கையாண்டது. இம்முறை உள்ள அரசு குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம் என்று யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor