பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு: 11 பணியாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிந்ததில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர்.

1500 அடி ஆழத்தில் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போதே சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டு, அது சுரங்கத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

விஷவாயுவை சுவாசித்தமையினால் அங்குள்ள பணியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர்.

சம்பவமறிந்து குறித்த இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் முதலில் சுரங்கத்துக்குள் தூய்மையான காற்றை செலுத்தியுள்ளனர்.

பின் உள்ளே சென்று பார்த்தபோது சுரங்க மேலாளர், ஒப்பந்ததாரர் உட்பட 11 பேர் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மீட்பு படையினர்.

ஆனால், அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Recommended For You

About the Author: admin