இறுதி யுத்தத்தில் படையினரின் அநீதிகளை மறுக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தியதோடு, தடுத்தும் வைத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மே 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18 ஆம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் இலங்கை பொலிஸார், வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்ப முயன்றனர்.

அதுமட்டுமன்றி, யுத்தத்தின் போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்து வைத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்ததோடு, மக்கள் அங்கு செல்வதையும் தடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி, வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும், அதன் அளவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், உடனடி நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும், பாரியமனித புதைகுழிகளை அகழ்வதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையை துன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன், இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin