தாய்லாந்தில் முதன்முறையாக நடத்தப்படும் ஆசிய தொடர் ஓட்டப்போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (21) நடத்தப்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கததை சுவீகரித்துள்ளது.
போட்டி ஆரம்பித்தது முதல் இறுதிவரை கவனம் செலுத்திய இலங்கை அணியினர் 3.04.48 நிமிடங்களில் ஓட்டத்தை நிறைவு செய்து இந்தப் பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.
காலிங்க குமாரகே, அருண தர்ஷன, பசிந்து லக்ஷான் மற்றும் தினுக தேஷான் ஆகியோர் ஆண்களுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
பலத்த மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் தமது முயற்சியால் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
இந்தப் போட்டியில், குறித்த தூரத்தினை 3.05.76 நிமிடங்களில் ஓடிமுடித்த இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளது.
கட்டார், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டதுடன், போட்டியை 3.07.37 நிமிடங்களில் நிறைவு செய்த வியட்நாம் அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது