தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: மே 19

வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பிலும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலும், ஆராயப்படவுள்ளதாகவும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவை.சோ.சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாண அங்கத்தவர்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னதாக, இடம்பெற்ற ‘மக்கள் மனு’ கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இவர்கள் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஆதரித்திருந்ததோடு கட்சி ரீதியாக தீர்மானம் எடுப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.

அதேவேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொது வேட்பாளர் விடயத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், கட்சி எந்த முடிவினை எடுக்கின்றதோ அதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin