முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்: 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பமானது.

இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், மேஜர் பண்டிதரின் தாயார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்டோர் பங்கு பற்றியிருந்தனர்.

அத்தோடு கம்பர்மலை சந்தியில் பாரதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கஞ்சி வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மே-18ஆம் திகதியை முன்னிட்டு முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்ப நிகழ்வு இன்று (12) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்‘ என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சிவில் அமைப்பினால் இவ் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மே-18 என இலக்கம் பொறிக்கப்பட்ட பானையில் கஞ்சி காச்சப்பட்டு வீதியில் சென்றோர்களுக்கு பரிமாறப்பட்டது.

அத்துடன் முள்ளி வாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களும் மக்களின் பார்வைக்கு விநியோகிக்கப்பட்டது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரமானது எதிர்வரும் மே-18ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin