புதுவருட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சித்திரை புதுவருட தினத்தில் (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்காகவும் 2611ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர் குழுவொன்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த கூட்டமைப்பு தமிழர்கள் மீதான அமெரிக்கக் கொள்கையில் ஒரு மாற்றத்தை வலியுறுத்தி, செயலாளர் பிளிங்கனுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த போராட்டக்காரர்கள்;

இலங்கையில் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என்பதை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானவர்கள். இதன் மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள எமது தமிழர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அத்துடன், 10 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகள் மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றியமைக்க வேண்டும்.

அவர்கள் அரசியலில் இருந்து பின்வாங்கி, புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை நாடுகளான மொண்டினீக்ரோ, தெற்கு சூடான், கொசோவோ, கிழக்கு திமோர் போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க புதிய தலைமுறையை அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin