ஐ.நா நோக்கி பிரித்தானியாவில் ஆரம்பமான போராட்ட பேரணி

தமிழ் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழத்தை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் போராட்டப் பேரணி பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.

குறித்த போராட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆதரவினை பெறும் நோக்கிலேயே நேற்று ஆரம்பமானதுடன், தொடர்ந்து 16 நாட்கள் இடம்பெறவுள்ளது.

போராட்டத்தின் நோக்கம்

தனிச்சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல், தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறை, இன படுகொலைகள், தமிழர் பாரம்பரிய நிலங்களில் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம், தமிழர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் போருக்கு பின்னரான இனவழிப்பு என்பவற்றை எதிர்த்து அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி பயணிக்கிறது.

“சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த கோரியும் தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்பதை வலியுறுத்தியும் உரிமைக்குரல் நீதிக்கான போராட்டமாய் ஆரம்பமாகியுள்ளது.” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த தொடர் போராட்டமானது, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஊடாகச் சென்று ஜெனிவாப் பேரணியில் இணையவுள்ளது.

மேலும் எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி ஐ.நா திடல் முன்பாக அனைத்துலக ரீதியாக மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான முன்நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், குறித்த ஈருருளிப்பயண போராட்டமும் இதன் ஒரு கட்டமாகவே கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin