இணையும் முக்கிய நபர்கள் ஓங்கும் சஜித்தின் கை

ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் பல முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, புத்தாண்டு தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இன்று இணைந்து கொண்டார்.

தயாஸ்ரித திசேரா ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தண்டிய தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1988 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியில் இணைந்து வடமேல் மாகாண சபைக்கு தெரிவானார். பின்னர் 2000ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சராகவும், 2007 இல் திறன்கள் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சிக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக பதவி வகித்தார்.

2010 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் பொது வளங்கள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக்கான அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

Recommended For You

About the Author: admin