மேலும் மூன்று அமைச்சர்களின் ஊழல் வழக்குகளின் தீர்ப்பு விரைவில்

தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2017-ல் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விவரம் 21ஆம் திகதி இன்று அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 இலட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

”மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது.

ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் தீர்ப்பு தாமதமாக வந்துள்ளது.

தமிழக அரசியல் களத்தின் முக்கியமான காலக் கட்டத்தில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. தமிழகத்தின் 35 அமைச்சர்களில் 11 பேர் மீது நீதிமன்றங்களில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதித்துறை அமைச்சர் மீதே வழக்கு நிலுவையில் உள்ளது.

அடுத்ததாக 4 அமைச்சர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் மற்றும் பொன்முடி மீதான மற்றொரு வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு அமைச்சர் இலாகா இல்லாமல் சிறையில் இருக்கிறார். அடுத்த ஒரு வருடத்திற்குள் தி.மு.க அமைச்சர்கள் தொடர்பாக இன்னும் 7-8 தீர்ப்புகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin