சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தப்பிச்சென்றுள்ளார்.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு 10,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டப்பணத்தை செலுத்த முடியாததன் காரணமாக அவர் எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, குறித்த நபரின் தண்டனைக் காலம் அடுத்த மாதம் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், தப்பிச்சென்ற கைதியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.