இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிக்க ஜப்பானுடன் பேச்சுவார்த்தை

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

“இலங்கையில் இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீள் மதீப்பீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்காக செலவிடப்பட்ட தொகை முதல் மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது.

இருப்பினும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி அடுத்த வருடத்தில் பொது வசதிகள் இடமாற்றம் மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் செயற்படுத்தப்படும்.

இலகு ரயில் திட்டத்திற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

மாலபே முதல் கோட்டை வரையிலான கட்டுமானம் தொடர்பான விரிவான திட்டங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ஏல ஆவணங்கள் மதிப்பீடுகள் மற்றும் கண்காணிப்பு சேவைகளை வழங்க சர்வதேச ஆலோசனை நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படை விடயங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இந்த பூர்வாங்க பணிகள் 2019 ஏப்ரலில் தொடங்கி 91 மாதங்களில் முடிக்கப்பட இருந்தது. இருப்பினும், 21 மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 31, 2020க்குப் பிறகு திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இந்த ஆலோசனைகள் நிறுத்தப்பட்டபோது, திட்டத்தின் அடிப்படைத் திட்டங்கள் 60% மற்றும் விரிவான திட்டங்கள் 78% நிறைவடைந்தன. மாலபே வரை மண் பரிசோதனை மற்றும் முன் சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்திற்கான காணி கையகப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது, இதற்காக அடையாளம் காணப்பட்ட காணியின் அளவு 22 ஹெக்டயர் ஆகும்.

பெரும்பாலான காணி கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இலகுரக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், ஆலோசனை சேவைகளுக்காக நியமிக்கப்பட்ட நிறுவனம் கோரிய சேதங்களை ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய, அமைச்சரவை பேச்சுவார்த்தை குழுவை நியமித்துள்ளது. இதற்கிடையில், JICA நிறுவனம் பெற்ற கடன் தொகையில் இருந்து திட்டத்திற்காக செலுத்த ஒப்புக்கொண்டது. ஆனால், கடன் செயல்படுத்தப்படாததால் பணம் செலுத்தப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin