யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால், நுரையீரல் மற்றும் இருதய ‘வால்வு’ ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் என கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளைஞர்கள் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.

அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடனும், கடும் காய்ச்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் வைத்தியசாலைக்கு சிகிசிச்சைக்காக வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில்,யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin