யாழில் புத்தாக்கம், தொழில்நுட்பம் தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு

வடக்கிலுள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

 

இதன்போது yarl IT Hub இன் தன்னார்வலர் சிவரதன் சிவராசா இது குறித்து தெளிவுபடுத்தினார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

 

யாழ் ஐரி கப் (yarl IT Hub) கடந்த 12 வருடங்களாக வடக்கில் முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் இந்த மூன்றையும் வளர்ப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

 

அதில் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக நாங்கள் செய்து வருவது yarl Geek challenge என்ற செயற்றிட்டமாகும். இது புதிய புதிய முயற்சிகளையும் புத்தாக்கங்களையும் ஊக்குவிப்பதற்கான நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது.

 

இந்த 11 வருடங்களில் இந்த நிகழ்வில் பங்குபற்றி 50 இற்கும் மேற்பட்ட கம்பனிகள் உருவாகி பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 12ஆவது வருடத்தில் yarl Geek challenge இனை இன்னும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடத்துவதற்கு நாங்கள் YGC innovation festival என்று மாற்றியுள்ளோம்.

 

இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான அம்சங்களை உள்ளடக்கி ஒரு திருவிழா போன்று ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நவம்பர் 3,4 மற்றும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறுவர்களுக்கான கற்பனை திறனை வளர்க்கும் நிலையங்கள், அனுபவ கற்றல் செயற்பாடுகளை வளர்க்கும் நிறுவனங்கள், அதே போல பாடசாலையில் இருந்து விலகியவர்களுக்கான முதன்மை வகுப்புகள் இப்படி நிறைய விடயங்களை உள்ளடக்கியுள்ளோம். இதற்கான அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN