மகளின் விவாகரத்தை கோலாகலமாக கொண்டாடிய தந்தை!

இந்தியாவில் மகளின் விவாகரத்தை கோலாகலமாக கொண்டாடி , மேளதாளத்துடன் மகளை வீட்டுக்கு அழைத்துவந்த தந்தையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவரது மகள் சாக்சி. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி சாக்சிக்கும், ஜார்க்கண்ட் மாநில மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக சச்சின் பணியாற்றி வரும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு பஜ்ராவில் உள்ள வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர்.

பெண்வீட்டாரை ஏமாற்றி மூன்றாவது திருமணம்
ஆரம்பம் முதலே சச்சின் குமார், அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு சாக்சியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சச்சின் குமாரும் அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றுவிட்ட நிலையிஒல் சுமார் ஒரு மாதமாக அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை.

வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமையல் செய்து சாக்சி சமாளித்தார். எனினும் தனக்கு நேர்ந்த கொடுமையை தாய், தந்தையிடம் அவர் கூறவில்லை.

இந்நிலையில் ஒருநாள் சச்சின் குமாரின் லேப்டாப்பை சாக்சி பயன்படுத்தினார். அப்போது தனித்தனியாக இரு பெண்களுடன் சச்சின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து சாக்சி அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இரு பெண்களிடமும் சாக்சி தொலைபேசியில் உரையாடியபோது சச்சினுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணமாகி இருப்பதும் 3-வதாக தன்னை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.

விவாகரத்து முடிவை பெரும் விழாவாக கொண்டாடிய தந்தை
தொடர்ந்து சச்சின் குமாரை விவாகரத்து செய்ய முடிவு செய்த சாக்சி, தனது முடிவை தாய், தந்தையிடம் கூறினார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த பிரேம் குப்தா, மணமகன் குடும்பத்தினருக்கு தகுந்த பாடம் புகுத்த திட்டமிட்டார்.

அதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு பஜ்ராவில் உள்ள சச்சின் குமாரின் வீட்டுக்கு சென்ற பிரேம் குப்தா, தனது மகள் சாக்சிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

வழிநெடுக பட்டாசு வெடித்து மகளின் விவாகரத்து முடிவை பெரும் விழாவாக கொண்டாடினார். இதுகுறித்து பிரேம் குப்தா கூறுகையில்,

ஒரு தந்தை மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது பெரும் தொகையை செலவு செய்கிறார். பல கனவுகளை காண்கிறார். சில நேரங்களில் திருமணம் கசப்பான அனுபவமாக மாறிவிடுகிறது. எனது மகள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு ஏற்பட்ட துயரத்தை துடைக்கும் வகையில் அவரது விவாகரத்து முடிவை திருமண விழா போல கொண்டாடினேன். திருமணத்துக்குப் பிறகு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும்.

என்னை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுமாறு பெண்களை பெற்ற பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன் என பிரேம் குப்தா தெரிவித்தார். இந்நிலையில் தனது மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என கலங்காது , மகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என தந்தை செய்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை கூறிவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor