காரில் சிக்கிய காதல் ஜோடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நுரெலியாவில் காரில் இருந்த 21 வயதான யுவதி மற்றும் 27 வயதான ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

நுவரெலியாவுக்கு போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிக்கிய போலி ஆவணங்கள்
அவர்களிடம் 03 மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், 03 வருமான உரிமங்கள், 03 காப்புறுதிச் சான்றிதழ்கள், நிதி நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி தவணைகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த 03 கடிதங்கள், வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான ஆட்சேபனை இல்லை என 03 கடிதங்கள், வாகன இலக்கத் தகடு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் 03 பிரதிகள், 03 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கரவண்டியொன்றின் பதிவு சான்றிதழை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 180,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு பேராதனை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆண் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் 21 வயதுடைய பெண் சந்தேகநபர் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor