மர்மமான முறையில் மாயமான வர்த்தகர் பொலிசாரால் கைது!

கொலொன்ன பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட வர்த்தகர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது நேற்று (18.08.2023) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வர்த்தகரிடம் நடத்திய விசாரணையில், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே தலைமறைவாகியதாகவும், இதன் காரணமாக போலி தகவலை வழங்கியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக திட்டம்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காணாமல் போன வர்த்தகர் மிரிஹானவில் உள்ள தனது நண்பரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக மிரிஹான பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பில் இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது..

அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டபோது, ​​வர்த்தகர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வர்த்தகரை கைது செய்த பொலிஸார், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு வர்த்தகர், பல்வேறு நபர்களிடம் எழுபது இலட்சம் கடன் பெற்றிருந்ததாகவும், அந்த கடனை போக்குவதற்காக தலைமறைவாக திட்டமிட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா

குறித்த நபர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று முன்தினம் கொலன்னாவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதற்கமைய வர்த்தகர் பயணித்த வான் உலுதுவாவ பிரதேசத்தில் தெனிய கொலொன்ன வீதியில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த வர்த்தகர் வானில் தெனியாய நகருக்குச் சென்று அங்கிருந்த வங்கியொன்றில் 10 இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது, ​​அவர் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று, கடையை விட்டு வெளியேறுவது குறித்த கடையின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தொழிலதிபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாவை எடுத்திருப்பதை இதனுடக கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

தேயிலை துாள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தேயிலை விவசாயிகளுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வர்த்தகர் பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 80 இலட்சம் ரூபா கடனாக பெற்றுள்ளதாகவும், கடனைத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல், குறித்த வர்த்தகர் இருவரின் கணக்கில் நான்கரை இலட்சம் ரூபாவை வரவு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தொழிலதிபர் பயணித்த வானில், சாரதி இருக்கையில் மிளகாய் தூள் சிதறியிருந்த நிலையில், மிளகாய் தூள் தூவி வர்த்தகர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்ததாக பொலிஸார் முதலில் தெரிவித்திருந்தனர்.

எனினும், சாரதியின் ஆசனத்தில் மிளகாய் தூள் சிதறியிருந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருக்கும்போது, ​​இவ்வாறு இருக்கை முழுவதும் மிளகாய் தூளை பரப்ப முடியாது என கருதிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor