மனித உரிமை போர்வையில் அதிகாரத் துஷ்பிரயோகம்: கனகராஜ் அதிருப்தி

 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத் துறையை நாடு மிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் இலங்கையில் இன்று பல இடங்களில் மனித உரிமைகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எமது நாட்டைப் போன்ற நாடுகளில் மனித உரிமை கோட்பாடுகளுக்கும் கள நிலமைகளுக்கும் வேறுபாடுகள் அதிகமுள்ளன.

அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை, ஒரு பிரஜைக்கான உரிமையாகக் காணப்படினும் அவ்வாறு ஒன்று கூடும் போது சவால் நிலைமைகள் ஏற்படுவதைக் காணலாம்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அடிப்படை உரிமையாக கருதப்படுமிடத்தும் சற்று எல்லை மீறுமிடத்தில் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். அண்மையிலும் சிலர் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றம் வரை சென்று பிணை வழங்கும் நிலை கூட ஏற்பட்டது.

சட்டத்தின்பால் செயற்படும் நிறுவனங்கள் பல சவாலுக்கு முகம் கொடுப்பதுடன், மனித உரிமையும் சவாலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது.

கீழைத் தேசங்களில் சர்வதேச சட்டத்திலே உள்ள உரிமைகளை ஏற்றிருந்தாலும் இங்கு சட்டமாக்கும் போது தமக்குச் சார்பான வகையிலே சட்டங்கள் இயற்றப்படும். சர்வதேச மட்டத்தில் உள்ள உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதற்கே அரசுகள் முன் நிற்கின்றன.

பொதுமக்களுக்கும் மனித உரிமையால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கும் மனித உரிமை தொடர்பான அறிவு குறைவானதாக உள்ளது. அதே போல் மனித உரிமை மீறல் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத்துறையை நாடுமிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.

அண்மையில் பெண்கள் தொடர்பில் மிகவும் கீழ்த்தரமாக முகநூலில் காணொளி பதிவேற்றம் செய்த நபரின் வீட்டினை மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்து தாக்கியதன் காரணமாக ஆண், பெண் என இருபாலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் இன்று பல இடங்களில்  மனித உரிமைகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தற்போது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN