எமது மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்; யாழ். பல்கலை. துணைவேந்தர் தெரிவு குறித்து அங்கஜன் கருத்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ்ப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பவராக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியைத் தானமாக வழங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள்.

ஒரு கல்விக் கூடத்திற்காக ஒரு கல்விக் கூடத்தை தானம் கொடுத்து உருவாக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக இருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் மற்றும் பேராசிரியர் துரைராஜா போன்றவர்கள் எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் துணைவேந்தராக தேர்வு செய்யப்படுபவர் எமது வரலாறுகளைத் தாங்கிச் செல்பவர்களாக இருக்க வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக நால்வர் போட்டியிடுகின்ற நிலையில் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படும் மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.

ஜனாதிபதி தான் விரும்புகின்ற ஒருவரை துணைவேந்தராக தெரிவு செய்யும் பொறுப்புள்ள நிலையில் துணைவேந்தர் தெரிவு அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான தெரிவாக அமையக் கூடாது.

ஆகவே நான் இந்தக்கருத்தை அரசியல்வாதி என்ற நிலையில் பதிவு செய்யாமல் நானும் ஒரு குடிமகன் என்ற ரீதியில் எமது மரபுகள் சம்பிரதாயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பதிவு செய்கிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!

Recommended For You

About the Author: S.R.KARAN