ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான பிரமாண்ட பேரணி!!
போர் ஆரம்பித்ததன் பின்னரான மிக முக்கிய நிகழ்வு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்,
போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற மிகப்பெரிய அரச ஆதரவுப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தலைநகர் தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியில் இராணுவ சீருடைகளை அணிந்த தன்னார்வலர்கள், பொதுமக்களுடன் இணைந்து தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்.
தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தவும், இராணுவப் பயிற்சி பெறவும் தாம் தயாராக இருப்பதாகப் பங்கேற்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் மூத்த இராணுவத் தளபதிகள் முன்னிலையில் இந்த அணிவகுப்பு மற்றும் பேரணி இடம்பெற்றுள்ளது.
ஈரானின் அரச ஊடகத் தகவல்களின்படி, 600,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் தற்காப்புத் தன்னார்வலர் இயக்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும்,
பேரணியில் சுமார் 300,000 பேர் வரை திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் முற்றுகை மற்றும் தீவிர பொருளாதாரத் தடைகளால் ஈரானியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையிலும்,
மக்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றது.
இதேவேளை, ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிராந்தியப் பதற்றங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.

