புதிதாக வாங்கிய தூசுறிஞ்சியால் நேர்ந்த விபரீதம்: பாரிஸில் தீக்கிரையான வீடு – லித்தியம் மின்கலத்தால் வந்த சோதனை!
பாரிஸின் 15-வது வலயத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட ‘டய்சன்’ (Dyson) தூசுறிஞ்சியின் (Vacuum cleaner) லித்தியம் மின்கலம் (Lithium Battery) தீப்பற்றியதே இந்த மோசமான விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
. இந்த கோர விபத்தில், அந்த வீட்டில் வசித்து வந்த பியர் (Pierre) மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் தங்களின் அனைத்து உடைமைகளையும் தீயில் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாகியுள்ளனர். தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்காகச் சமீபத்தில் புதிதாக வாங்கிய தூசுறிஞ்சியில் பொருத்தப்பட்டிருந்த லித்தியம் மின்கலத்தில் இருந்துதான் தீப்பிழம்புகள் உருவாகி வீடு முழுவதும் பரவியதாக அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் போது வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அந்தப் பெண்ணுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதால், அந்தப் குடும்பம் ஈடுசெய்ய முடியாத பொருட்சேதத்தைச் சந்தித்துள்ளது. அன்றாடப் பயன்பாட்டில் உள்ள நவீன வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் எழுப்பியுள்ளது.

