ஆளில்லா வானூர்தி போக்குவரத்து திட்டம் விரைவில் ஆரம்பம்….

நாட்டில் ஆளில்லா வானூர்தி ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு தடவையில் 06 பயணிகளை மாத்திரம் ஏற்றிச் செல்லக்கூடிய வகையில், ஆளில்லா வானூர்தி போக்குவரத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிபாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, குறிப்பிட்டார்.

இந்த திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சிவில் வானூர்தி சேவை நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய, போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதற்கமைய, இந்த திட்டத்திற்கான அடுத்தக்கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில், ஆளில்லா வானூர்திகளை விநியோகிக்கும் நிறுவனம் சார்ந்து, தாய்லாந்திலிருந்து குழுவொன்றும் இந்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வரகைதரவுள்ளது.

குறித்த குழுவினூடாக ஆளில்லா வானூர்தி போக்குவரத்து சேவையை ஆரம்பித்து, மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை அரச தனியார் கூட்டு முயற்சியின் ஊடாக சிறந்த முதலீட்டு திட்டமாக மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனூடாக, பயணிகள் போக்குவரத்து மாத்திரமின்றி, சரக்கு போக்குவரத்துகளையும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து, மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கான போக்குவரத்துக்களை மேற்கொள்ள இந்த திட்டம் சிறந்த முறை எனவும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆளில்லா வானூர்திகளை இயக்குபவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் இந்த போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கான ஒழுங்கு விதிகள் என்பன அதிகார சபையினூடக முன்னெடுக்கப்படவுள்ளன.

குறைந்த செலவில், மிகவும் வினைத்திறனான போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபையின் பணிபாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சூரியன் செய்திப் பிரிவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin