ஜூலை 1 முதல் சில வெளிநாட்டு மாணவர்களுக்கு APL( வீட்டு உதவி) நிறுத்தம்:
பிரான்ஸ் அரசு 200 மில்லியன் யூரோ வரை சேமிக்கத் திட்டம்
பிரான்சில் 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (EEE) மற்றும் சுவிட்சர்லாந்திற்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த,
அரசின் சமூக அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (bourse) பெறாத மாணவர்கள் இனி APL (Aide Personnalisée au Logement) எனப்படும் வீட்டு வாடகை உதவித்தொகையைப் பெற முடியாது.
இந்த மாற்றத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் யூரோ வரை அரசுச் செலவைச் சேமிக்க முடியும் என்று வீடமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் பாதிக்காது. EU/EEE/சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மாணவர்கள்,
சமூக அடிப்படையிலான புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள், பயிற்சிப் பணியில் (apprentissage), contrat de professionnalisation-இல் இருப்பவர்கள், வேலை செய்து வரும் மாணவர்கள்,
மேலும் அகதிகள் மற்றும் சில சிறப்பு சட்ட அந்தஸ்து பெற்றவர்கள் தொடர்ந்து APL உதவியைப் பெற முடியும்.
அரசு இந்த முடிவை, பொதுமக்களின் வரிப்பணத்தை உண்மையில் அதிக உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்கும் நோக்கில் எடுத்துள்ளதாக விளக்கியுள்ளது.
அதே நேரத்தில், இந்த நடவடிக்கை பிரான்சில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும் என்பதால், பல மாணவர் அமைப்புகளும் கல்வித்துறையினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

