உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால், மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்
இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“2024 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர்கள் ஆட்சேர்ப்பை அமைச்சராக நான் நிறுத்தினேன் என்று சொன்னேன்.
ஆம், ஆட்சேர்ப்புக்கு தயாராக இருந்த 100 உப பொலிஸ் பரிசோதகர்களின் ஆட்சேர்ப்பை நிறுத்தினேன்.”
“இது தொடர்பாக 17 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றை விசாரணை செய்தோம். சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.”
“நாம் ஆட்சிக்கு வரும்போது தெரிவு செய்யப்பட்டிருந்த குழுவினரில் ஒரு தொகுதியினர் சட்டவிரோதமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த 17 முறைப்பாடுகளில் கூறப்பட்டிருந்தது. சான்றிதழ்கள் இல்லாமலேயே அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.”
“இதற்காக நாம் குழுவொன்றை நியமித்து ஆழமாக விசாரணை செய்தோம்.
சட்டவிரோதமாகத் தெரிவு செய்யப்பட்ட 19 உப பொலிஸ் பரிசோதகர்கள் இருப்பதாகத் தீர்மானம் வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் இன்றி புள்ளிகள் வழங்கப்பட்டு அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.”
“அதற்கமைய, மீண்டும் முதலில் இருந்து 2500 பேரை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தி, தகுதியுடைய 100 பேரைத் தெரிவு செய்தோம். ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் நீக்கப்பட்டு, நேர்மையான முறையில் மேலும் 19 பேர் சேர்க்கப்பட்டனர்.”
“அந்த 100 பேரும் தெரிவு செய்யப்பட்டு, இப்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூரியில் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin