Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?
YouTube பிரபலமான சவுக்கு சங்கர் கடந்த திமுக அரசுக்கு எதிராகவும், குறிப்பாக முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
மேலும் அப்போதைய அரசுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறி சவுக்கு சங்கர் கடந்த திமுக ஆட்சி காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.
இதனையடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், உடல் நலப்பிரச்சனையை காரணம் காட்டி 12 வாரங்கள் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்தார். இதனையடுத்து தொடர் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மீதான ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதி வரை ஜாமீனை நீடித்தது.
குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்
இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் திடீரென சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆந்திராவில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அடுத்தாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையானது நீடித்தது.
குண்டர் சட்டம் ரத்து
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் இருந்த அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் கரூர் சம்பத்தின் போது தவெக மீது வழக்கு பதிவு செய்த போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
“தடுப்பு காவலுக்கு போதுமான காரணம் இல்லை” என ஆலோசனை வாரிய பரிந்துரைக்கு பின் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். குண்டர் ரத்து காரணமாக வேறு வழக்கு இல்லையெனில் புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் விடுதலையாக வாய்ப்பு உருவாகியுள்ளது

