பாரிஸில் சந்தைகளில் வாடிக்கையாளர்களைத் தேடி, வாகனத்திற்குள் சிகிச்சை அளித்த போலிப் பல் மருத்துவர் கைது!

பாரிஸில் சந்தைகளில் வாடிக்கையாளர்களைத் தேடி, வாகனத்திற்குள் சிகிச்சை அளித்த போலிப் பல் மருத்துவர் கைது!

தன்னை ஒரு பல் மருத்துவராகக் காட்டிக்கொண்ட நபர் ஒருவர், சட்டவிரோதமாக மருத்துவத் தொழில் செய்தமை, திருடப்பட்ட பொருட்களைப் பதுக்கியமை மற்றும் அபாயகரமான பொருட்களை வைத்திருந்தமை ஆகிய குற்றங்களுக்காக வரும் அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளார். முறையான ஆவணங்களின்றிப் பாரிஸில் வசிக்கும் வெளிநாட்டினரைக் குறிவைத்து, தனது வாகனத்திலோ அல்லது அவர்களின் வீடுகளிலோ இவர் போலிச் சிகிச்சை அளித்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த மே 13, 2026 புதன்கிழமையன்று 52 வயதான இந்த நபர், சட்டவிரோதமாகப் பல் மருத்துவத் தொழில் செய்த குற்றத்திற்காகப் பாரிஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்நிலைப்படுத்தப்பட்டார். பாரிஸின் 18 வது நிர்வாகப்பகுதியில் , கடந்த வாரத் தொடக்கத்தில் இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் சிகிச்சை பெற்ற தனது உறவினர் ஒருவருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி, வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அந்தப் போலி மருத்துவரைக் கண்டறிந்தனர். அவரது வாகனத்தைச் சோதனை செய்தபோது, தரமற்ற மற்றும் அடிப்படையான மருத்துவ உபகரணங்கள், அலைபேசிகள் மற்றும் 1,300 யூரோ ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாகக் காவல் காவலில் (Garde à vue) வைக்கப்பட்டார்.

 

விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இந்த நபர் குறிப்பாக Porte d’Aubervilliers மற்றும் Saint-Ouen போன்ற சந்தைகளில் தனது சேவைகளை விளம்பரப்படுத்தியுள்ளார். முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி வசிக்கும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களையே இவர் தனது இலக்காகக் கொண்டுள்ளார்.

 

“பற்கள் சேதமடைந்த நிலையில் உள்ளவர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் தனது தொடர்பட்டையைக் (Business card) கொடுத்துச் சேவை செய்ய முன்வந்துள்ளார். பின்னர் தனது வாகனத்திலோ அல்லது வாடிக்கையாளர்களின் வீடுகளிலோ வைத்துப் பல் சிகிச்சைகளைச் செய்துள்ளார்” என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

 

சந்தேக நபரின் அலைபேசியை ஆய்வு செய்ததில், அவர் சிகிச்சை அளித்த வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு குற்றத்தை உறுதி செய்ய முடிந்தது. ஆனால், தாங்கள் முறையான ஆவணங்களின்றி வசிப்பதால், அவர்கள் சட்டரீதியாகப் புகார் அளிக்க முன்வரவில்லை.

 

இந்த நிலையில், போலி மருத்துவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். எவ்வித முறையான மருத்துவக் கல்வித் தகுதியுமற்ற, பல் செயற்கை உறுப்பு நிபுணராகப் (Prothésiste dentaire) பணியாற்றிய தனது தந்தையிடமிருந்தே இத்தொழிலைக் கற்றுக்கொண்டதாகக் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் வரும் அக்டோபர் 26, 2026 அன்று நீதியின் முன் நிறுத்தப்படவுள்ளார்.

 

பிரான்சில் சட்ட விதிகளுக்கமைய இந்த போலி மருத்துவரின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை

Recommended For You

About the Author: admin